சென்னை: தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைக்கப்படுவதாக  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழகஅரசின் இந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதில் அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்ளுதல், ‘டி’ மற்றும் ‘சி’ பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புதல், பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களின் பணிச் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களை காலமுறை ஊதியத்தில் அமர்த்துதல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

இதையடுத்து, அசாணை 115 குறித்து தமிழகஅரசு விளக்கம் வெளியிட்டது. இந்தநிலையில்  அரசாணை 115ஐ நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதில், அரசு பணியாளர் சங்கங்களின் கருத்துக்களை கேட்ட பின்பே குறுகிய கால பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை குறித்தது முடிவெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசாணை 115ன் கீழ் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு வரம்பு ரத்து செய்யப்படுகிறது. அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று) மனு அளித்தனர்.

அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த முதலமைச்சர் எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்ததோடு, இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.