சென்னை:

டப்பாடி அரசுக்கு எதிராக கட்சிக் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நினைவூட்டல்  கடிதத்திற்கு பதில்  அளிக்க ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேரும் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றதும் பிப்ரவரி மாதம் 18ம் தேதி சட்டமன்றத்தில்  நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  அப்போது, அதிமுக தலைமை மீது  அதிருப்தியில் இருந்த தற்போதைய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  மாபா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருந்தாலும், எடப்பாடி ஆட்சி வெற்றிபெற்றது.

இந்த நிலையில், கட்சி கொறடா உத்தரவை மீறி  ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதி மன்றமும், தமிழக சபாநாயகர் விரைவில் உரிய நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு  பதில்தர ஒரு  மாதம் அவகாசம் கேட்டு 11 எம்எல்ஏக்கள் சார்பில் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.