மதுரை: முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், தேனி பகுதியில் வாங்கிய பஞ்சமி நிலத்துக்கான பட்டாவை மாநில எஸ்சி-எஸ்டி ஆணையம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பஞ்சமி நிலம் என்பது தலித்துகள் வாழ்வில் முன்னேறும் வகையில், அரசு சார்பில் வழங்கப்பட்ட நிலம். இது 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் போது தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலமாகும். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் ஏக்கர் நிலம் எஸ்சி, எஸ்டி எனப்படும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது இந்த நிலத்தை விற்கவோ அல்லது மறுவகைப்படுத்தவோ முடியாது. இந்த நிலங்களை தலித் அல்லாத வேறு யாரும் வாங்கி உபயோகப்படுத்தினாலும், அது செல்லுபடியாகாது.
ஆனால் பல பகுதிகளில் இந்த பஞ்சமி நிலத்தை மற்றவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். பஞ்சமி நிலங்களில் பெரும்பாலானவை தலித் அல்லாதவர்களால் மற்றவர்களின் பெயர்களில் ஆக்கிரமிக்கப்பட்டன, மேலும் பட்டாக்கள் அதிகாரிகளால் மாற்றப்பட்டன. மாநில அரசு கூட பஞ்சமி நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அல்லது தொழில்துறை பூங்காக்களுக்கு ஒதுக்கியுள்ளது. அரசும் பல பஞ்சமி நிலங்களை கையகப்படுத்தி அரசு நிறுவனங்கள், பூங்காங்கள் என உபயோகப்படுத்தி வருகிறது. அதுபோல பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையோடு பஞ்சமி நிலங்களை மாற்றி, தங்களது பெயர்களுக்கு பட்டா வாங்கி உள்ளனர். திமுகவின் முரசொலி நாளேடு உள்ள இடமும் பஞ்சமி நிலம் என கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், தேனி பகுதியில் உங்ளள பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒபிஎஸ் வாங்கிய அந்நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யுமாறு சென்னை எஸ்சி – எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தேனி, ராஜா களம் பகுதியில் உள்ள 40 சென்ட் பஞ்சமி நிலத்தை ஓபிஎஸ் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை கடந்த 1991ம் ஆண்டு மூக்கன் என்பவருக்கு ஆதிதிராவிட நலத்துறை வழங்கியது. அதன்படி இந்த நிலத்தை 15 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்யக் கூடாது மற்றும், சம்பந்தப்பட்டவர் விரும்பினார் அந்த நிலத்தை பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்க முடியும்.
ஆனால், விதியை மீறி, இந்த நிலத்தை பட்டியலினத்தைச் சாராத ஹரி சங்கர் என்பவருக்கு மூக்கன் கடந்த 2008ம் ஆண்டு எழுதிக் கொடுத்ததாக கூறப்படு கிறது. இதையடுத்து, ஹரி சங்கரிடமிருந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அந்த நிலத்தை வாங்கி, தனது பெயரில் மாற்றி பட்டா வாங்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மூக்கனின் மகன் பாலகிருஷ்ணன் என்பவர் மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், சென்னையில் உள்ள மாநில எஸ்.சி – எஸ்.டி ஆணையம் விசாரணை நடத்திவந்தது. இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த நிலத்துக்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை அரசு ரத்து செய்ய உத்தரவிட்டது.
முறையற்ற வகையில், நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு ஆணையம், உத்தரவிட்டுள்ளது.
மேலும் இத்தீர்ப்பின்போது, நிலம் வாங்குவோர், தாய் பத்திரங்களை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என சுற்றறிக்கைகள் பிறப்பிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மாவட்ட பத்திர பதிவாளர்களுக்கும் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக தேனி பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலத்தினை, சட்டத்திற்கு புறம்பாக ஓபிஎஸ் உதவியாளராக இருந்த அன்னபிரகாஷ் உள்ளிட்ட பலருக்கும் பட்டா மாறுதல் செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கினை தொடர்ந்து, பட்டா மாறுதல் செய்யப்பட்ட அனைத்து நிலங்களையும் அரசு கையகப்படுத்தியது. அப்போது ஓபிஎஸ் சகோதரர் ஒருவரது பெயரில், பஞ்சமி நிலம் பெறப்பட்டதாகவும், அந்த நிலமும் அந்த காலகட்டத்தில் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் எஸ்சி, எஸ்டி அல்லாத சிலருக்கு விற்கப்பட்டது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஓபிஎஸ் பெயரில் பெறப்பட்ட பட்டாவை ரத்து செய்ய எஸ்சி – எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் புதிய தலைவராக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். தமிழ்வாணன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.