சென்னை: ஓ.பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அவர் ஆட்டக்களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகிவிட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகார் மனு  தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம்,  அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்தார்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  ஈரோடு கிழக்கில் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக பணத்தை தண்ணீர் போல் இறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைத்து பிரியாணி, ரூ 500 கொடுக்கப்படுகிறது.

வாக்காளர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்கள். மனதை மாற்ற சுற்றுலா அழைத்து செல்லும் கேலிக்கூத்தான, கேவலமாக ஆட்சியை பேசும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவுகின்றனர். தேர்தல் ஆணையமும் அதை கண்டுகொள்வது இல்லை.

இந்த ஆட்சியில் தவறுசெய்தால் விமர்சனம் வரத்தான் செய்யும். பணநாயகத்தைவிட, ஜனநாயகத்தைத்தான் நாங்கள் நம்புகிறோம்.  திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை இல்லாத நாட்களே இல்லை. தினந்தோறும் கொலை , கொள்ளை குறித்த செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

எங்கள் ஆட்சியில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்தோம். ஆனால், தற்போது எப்படி உள்ளது. இந்த ஆட்சியில் காவல்துறை செயல்படவில்லை. அம்மா ஆட்சியில் காக்கிச்சட்டை போடுவது கெளரவமாக பார்க்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஏன் காக்கிச் சட்டை போடுகிறோம் என நினைக்கிறார்கள்.

 ஒரு திரைப் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் இழிவுபடுத்தப்படும்போது, இந்த இந்த காட்சிகளை நீக்குங்கள் என அம்மா சொன்னார். கமல்ஹாசன் இன்று பேசுவது போல அம்மா இருக்கும்போது சொல்ல வேண்டியதுதானே . உண்மையை திரித்து பேசக்கூடாது என்றவர், ஓபிஎஸ் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,  கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என நாங்கள் ஒருமித்த கருத்துடன் தான் இருந்தோம் , ஆனால்,  தற்போது,  ஓ.பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அவர் ஆட்டக்களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகிவிட்டார்.

இவ்வாறு கூறினார்.