டில்லி:

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த  ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரி திமுக சார்பில் சக்கரபாணி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர்  தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீது  பல கட்ட விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசியல் கட்சிகள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றன.

இந்த நிலையில், வழக்கை விரைவாக விசாரிக்க கோரி ஏற்கனவே திமுக தரப்பில் உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த நிலையில் டிடிவி தரப்பிலும்  வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விரைவாக விசாரிக்க முடியாது, வழக்கை பட்டியலிட முயற்சி செய்கிறோம்   உச்சநீதி மன்றம்  தெரிவித்து உள்ளது. இது தமிழக எதிர்க்கட்சிகளிடையே  அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் இன இரு அணிகாக சிதறியது. பின்னர் சசிகலா ஆதரவுடன் ஆட்சி அமைச்ச எடப்பாடி  அரசு,  சட்டமன்றத்தில்  நம்பிக்கை வாக்கு கோரிய போது, கட்சி கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல் ஏக்கள் 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டார். அதையடுத்து,   சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. ஆனால்,  சபாநாய கரின் தீர்ப்பில் தலையிட முடியாது உயர்நீதி மன்றம் தெரிவித்து விட்டது.

இதைத்தொடர்ந்து, திமுக மற்றும் டிடிவி தரப்பில் உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஏற்கனவே நடைபெற்று இறுதி விசாரணைக்காக காத்திருக்கிறது. இறுதி விசாரணை நடைபெற்று முடிந்தால், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.