ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ். சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதிமுக போட்டி வேட்பாளர் அடிப்படையில் எம்.எல்.ஏ. பதவி பறிபோக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வரும் அதிமுக-வில் இருந்து வெளியேற்றப்பட்ட தலைவர்களில் ஒருவருமான ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓ.பி.எஸ். ராமநாதபுரத்தில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்கள் புடைசூழ வந்திருந்தார்.

அதிமுக-வில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சுயேட்சையாக போட்டியிட ஓ.பி.எஸ். வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக ஓ.பி.எஸ். கூறியுள்ள நிலையில் ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ். தற்போது அதிமுக-வின் போட்டி வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த தேர்தலில் திமுக, அதிமுக கட்சி சின்னத்தில் நின்ற கூட்டணி கட்சிகள் இம்முறை தங்கள் சொந்த சின்னத்தில் நிற்க முடிவெடுத்துள்ளன.

இதனால், இந்த நாடாளுமன்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் எந்தெந்த கட்சிகளுக்கு என்ன பலம் உள்ளது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.