சென்னை: தமிழக சட்டப்பேரவையில்  இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்lடது. மிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  பச்சை நிற துண்டு அணிந்து  தமிழக சட்டப்பேரவையில்  3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப் பட்டு உள்ளன.

வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியளார்களிடம் பேசிய  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வேளாண் பெருமக்களுக்கு பெரிய திட்டங்கள் உள்ளது. பல துறைகளைச் சேர்த்து 2 மணி நேர பட்ஜெட்டை அமைச்சர் வாசித்து உள்ளார். ஆனால் வேளாண் பெருமக்களுக்கு முக்கியமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் இதில் இல்லை.

கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி நிலை அறிக்கையில் வெறும் ரூ.195 தான் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய ஏமாற்று வேலை.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். இதைப் பற்றிய அறிவிப்பு இல்லை.

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் ரகங்களை பிரித்து ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

பயிர் காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவில் அதிக அளவு இழப்பீட்டு தொகை பெற்று தந்த அரசு அதிமுக அரசு. வறட்சி வந்த போது இழப்பீட்டு தொகையை அதிகமாக வழங்கிய அரசும் அதிமுக அரசு தான்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வெள்ளதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.13,500 தான் இழப்பீடு வழங்கப்பட்டது. விவசாயிகள் கோரிக்கை வைத்தும் கூட முறையான கணக்கீடு செய்யவில்லை. எனது ஆட்சியில் இழப்பீட்டு தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை பெற முடியாத அவல நிலை தான் இந்த ஆட்சியில் உள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் சேதம் அடைந்தது. இதை எல்லாம் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. நெல் மூட்டைகளை பாதுகாக்க தேவையான தார்ப் பாய்களை கூட இந்த அரசு செய்யவில்லை.

குடிமராமத்து திட்டம், கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த பட்ஜெட்டில் வேளாண் மக்களின் நலனுக்கு எந்த வித புதிய திட்டமும் இல்லை. இந்த அரசு விவசாயிகளின் வாழ்க்கையில் கண்ணாம்மூச்சி விளையாடும் அரசாக உள்ளது.

பொங்கல் பரிசில் இந்த அரசு முதலில் கரும்பை சேர்க்கவில்லை. இதற்கு எதிராக நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். மேலும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதை விளைவாக தான் இந்த அரசு கரும்பை பொங்கல் தொகுப்பில் வழங்கியது என்றார்.

வேளாண் பட்ஜெட் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “வேளாண்மைக்கான நிலப்பரப்பு குறைந்து வருவதாகவும், வேளாண் நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதாகவும் வேளாண்மைத் துறை அமைச்சர் கவலை தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வேளாண்மை அல்லாத திட்டங்களுக்காக விளை நிலங்களை அரசே கையகப்படுத்தி வரும் நிலையில், அதற்கு மாற்று நடவடிக்கை என்ன என்பதை வேளாண் பட்ஜெட்டில் ஏன் சொல்லவில்லை?

நேரடி கொள்முதல் நிலையங்கள் அதிகம் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாமால், திறந்த வெளியில் வைக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதைத் தடுக்கவும், நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பணம் வசூலிப்பதைத் தடுப்பதற்கும் வழிமுறைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசின் ரூ.2821 தொகையுடன் கூடுதலாக ரூ.195 வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 என்று திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் எத்தனை வேளாண் பட்ஜெட்கள் தாக்கலாவதற்கு விவசாயிகள் காத்திருக்க வேண்டுமோ என தெரியவில்லை.கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை தொகையை பெற்றுத்தர என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஏதும் அறிவிக்கவில்லை

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டபோதிலும், நாட்டு மக்களுக்கு உணவு உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய வகையில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தையே ஏற்படுத்தும்.விவசாயிகளின் முக்கிய ஆதாரமாக திகழும் நீராதாரத்தை வளப்படுத்தும் நதிநீர் இணைப்பு திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்தும் வேளாண்மை பட்ஜெட்டில் அமைச்சர் குறிப்பிட மறந்தது ஏன்?

பருவநிலை மாற்றம் காரணமாக உரிய நேரத்தில் மழை பெய்யாமல் பருவம் தவறி மழை பெய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு உரிய நீர் மேலாண்மை திட்டம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு செயல்படுத்துவது தொடர்பான திட்டங்கள் ஏதும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

முருங்கை, மல்லிகை பூ உற்பத்தி இயக்கம் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்க அம்சங்களாக இருந்தாலும், நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் உற்பத்திக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது போதுமானது இல்லை. மேலும், விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்துக்கு அனுமதிக்கு தடை, செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடைகளில் விற்பனையை தடுப்பதற்கு நடவடிக்கை ஆகியவை குறித்து வேளாண்மை பட்ஜெட்டில் ஏதும் தெரிவிக்கப்படாதது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைப் போல வேளாண் விளை பொருட்களுக்கு தகுந்த விலை நிர்ணயிக்க, ஆய்வுகள் மேற்கொண்டு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட போதிலும், அதற்கான முன்னெடுப்பு மூன்றாவது வேளாண்மை பட்ஜெட்டிலும் தென்படவில்லை.மொத்தத்தில் திமுக அரசு மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்மை பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையடையச் செய்வதாக இல்லாமல் அவர்களை மேலும் வேதனையின் விளிம்புக்குத் தள்ளும் வகையில்தான் இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.