சென்னை: நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்கட்டி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்,  இரு அவைகளும்  மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (13/12/23)  கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கம்போல் அவை இயங்கி வந்ததது. இந்நிலையில் நேற்று மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து 2 பேர் பார்வையளர்கள் மாடத்தில் இருந்து கிழே குதித்து, கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகளை வீசினர். இதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியானது. பின் சுற்றியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரையும் பிடித்து பாதுகாவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் நாடாளுமன்ற வாசலிலும் இருபெண்கள் வண்ண புகையை வெளிப்படுத்தும் குப்பிகளை கொண்டு போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (13/12/23)  2 பேர் அத்துமீறி நுழைந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இந்த அத்துமீறலுக்கு இவர்கள் தான் காரணமா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சி.ஆர்.பி.எஃப் மற்றும் indo tibetian border force – இன் தலைவராக இருப்பவர் அனில் தயால்சிங், அவர் தலைமையில் தான விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து இன்று கூடுதல் பாதுகாப்புடன் இன்று நாடாளுமன்றம் மீண்டும் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே உறுப்பினர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் புகைக்குப்பிகள் வீசப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தான் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்கக்கோரி காங்கிரஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதி 267-ன் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்த விவாதிக்க காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், ஒருவர் மட்டும் ஹரியானாவை சேர்ந்தவர் என்றும் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் 7பேர் பணியிடை நீக்கப்பம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்கக்கோரி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை குற்றம் சாட்டி அமளியில் ஈடுபட்டனர்.   எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக இரு அவைகளும்  மதியம் 2மணி வரை ஒத்திவைப்பு.