சென்னை: பிரபல கண்மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவை சென்னையில் நிறுவிய டாக்டர் பத்ரிநாத்  வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெற உதவினார். சங்கர நேத்ராலயா மருத்துவமனை தினமும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு தொண்டு செய்து வருகிறது. டாக்டர் பத்ரிநாத் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமுக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,.  “சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான திரு. எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன். திரு. எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என   தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்கள் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன்.அமெரிக்காவில் உயர்படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் திரு. பத்ரிநாத் அவர்கள் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை பல்கிப் பெருகி இன்று நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.

இத்தகைய சேவைக்காக இந்திய அரசால் வழங்கப்படும் ‘பத்மபூஷன்’ விருதினையும் மருத்துவர் பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.சங்கர நேத்ராலயா மூலம் பத்ரிநாத் அவர்கள் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா அவர்கள் பெரும் நிதியுதவியை அந்த மருத்துவமனைக்கு அளித்ததுடன், பின்னர் தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார் என்பதன் மூலம் இத்துறையில் திரு. பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியலாம். எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் அவர்களது மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு, எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.