சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து ,மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு  முடிவு எடுக்கப்படும் என முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவு பெறுவதையொட்டி, மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பது தொடர்பாக, முதல்வர் இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதற்கிடையில், மத்தியஅரசு,  10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கலாம் என அறிவித்துள்ள நிலையில்,  தமிழக அரசும், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்டறிந்து, மருத்துவக் குழுவினருடன் கலந்தாலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும்,  10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று அனுமதி அளித்து, பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாகவும்,  இது தொடர்பாக பெற்றோர்களின் கருத்து கேட்கப்பட்டு வருவதாக கூறியவர்,   தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, கொரோனா நோய்த் தொற்றுக்காக அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கத்தில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.