சென்னை: ஓரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி; வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது என பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் செப்டம்பர் 1ந்தேதி முதல் தொடங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. பள்ளிகளில் முதல்கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

இதையொட்டி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,

பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்

வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும்.

பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம்.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர்.

வகுப்பறைகளிலும், பள்ளி வளாகத்திலும் மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

பள்ளிகள் திறக்கும் முன் பள்ளி வளாகத்தில் உள்ள மேஜை, இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும்.

பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.