டெல்லி: மத்திய பட்ஜெட் மீது நாடாளுமன்றத்தில் 11மணி நேரம் மட்டுமே விவாதத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 1ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரி இல்லாத இந்த பட்ஜெட்டில் மக்கள் வாழ்வாதரத்தை உயர்த்துவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை. 90 நிமிடத்தில் ஜீரோ பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்துவிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தராமன்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை மீது 12 மணி நேரமும், பட்ஜெட் மீது 11 மணி நேரமும் விவாதம் நடத்த, ராஜ்யசபா அலுவலக ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில், குடியரசுத்தலைவர்  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, இன்று முதல் 7ம் தேதி வரை விவாதம் நடக்கிறது.7ம் தேதி லோக்சபாவிலும், 8ம் தேதி ராஜ்யசபாவிலும், விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசுகிறார். இரு சபைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் 8ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை நடக்கிறது. 11ம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவாதத்துக்கு பதில் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.