சென்னை:  இந்தியாவிற்கு ஒரு மொழி, ஒரு மதம் சாத்தியமில்லை என்றும் ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என மலையாள மனோரமா விழாவில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டு மலையாளத்தில் பேசிய முதலமைச்சர் கூறினார்.

ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என முதல்வர் முக.ஸ்டாலின் கூறினார். மாநில அரசுகள் தன்னிறைவுபெற்ற அரசுகளாக இருந்தால் தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருச்சூரில், மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற ‘இந்தியா – 75’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு மலையாளத்தில் சிறப்புரை ஆற்றினார்.  அப்போது, இந்தியாவிற்கு ஒரு மொழி, ஒரு மதம் சாத்தியமில்லை-  கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

தமிழ் மலையாள மொழிகள் இடையே ஆழமான உறவு உள்ளது. பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையுடன் வாழ, மொழி வாரி மாநிலங்களை முன்னாள் பிரதமர் நேரு உருவாக்கிக் கொடுத்தார். கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு ஒரு மொழி, ஒரு மதம் சாத்தியமில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் மாநிலங்களையும் காப்பதே நாட்டை காப்பதற்கான அர்த்தம். மக்களின் அன்றாட தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றுவது மாநில அரசுதான். மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே நாடு வலிமை பெறும். வலுவான மாநிலங்கள் மத்திய அரசுக்கு பலம்தானே தவிர பலவீனம் அல்ல. இந்தியா மேலும் வலிமையுடன் இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கூறினார்.