சென்னை

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது இயந்திரம் மோதியதால் ஒரு வீடு சேதம் அடைந்துள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை போரூர் அஞ்சுகம் நகரில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத இயந்திரம் மோதி வீடு ஒன்று சேதம் அடைந்தது.

சென்னை போரூர் அஞ்சுகம் நகரில் பார்த்தியநாதன் என்பவர் வீட்டின் மீது இயந்திரம் மோதியது. இந்த இயந்திரம் மோதியதை அடுத்து வீட்டில் இருந்த பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே ஓடினர்.

பார்த்தியநாதன் வீட்டில் இயந்திரம் மோதியதை அடுத்து பூகம்பம் வந்ததாக நினைத்து மற்ற குடியிருப்பு வாசிகளும் வீட்டில் இருந்து வெளியேறினர். இயந்திரம் மோதியதில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், பேன் போன்ற உடைமைகள் சேதமாகின.

இந்த இயந்திரத்தைக் கையாண்ட ஆபரேட்டர் வீட்டைக் கவனிக்காமல் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.