ஸ்ரீநகர்: பாங்காங் ஏரிக்கு நாங்கள் செல்லும் வழியில், என் தந்தை கூறிய  உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றானது  என மோட்டார் சைக்கிளில் பாங்காங் ஏரிக்கு  செல்லும் வழியில் ‘லடாக்’ பகுதியின் இயற்கை அழகை ரசித்து ராகுல்காந்தி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக லடாக் பகுதிக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது பயணத்தை ஆகஸ்டு 25ந்தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளார்.  மத்திய பாஜக அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5, அன்று சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (A) நீக்கியது. இதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் ஜே-கே என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதற்கு பிறகு முதன்முறையாக ராகுல்காந்தி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

லடாக் சென்றுள்ள ராகுலுக்கு, கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில்,  ஆகஸ்ட் 20ஆம் தேதி  தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை பாங்காங் ஏரியில் ராகுல் காந்தி கொண்டாடவுள்ளதால்  ராகுலின்  லடாக் பயணம் ஆகஸ்ட் 25ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 25ஆம் தேதி 30 உறுப்பினர்களைக் கொண்ட லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC) கார்கில் தேர்தல் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ள கார்கில் கவுன்சில் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதனால், ராகுல் காந்தி இந்த இடைபட்ட நாட்களில் கார்கில் நினைவிடத்துக்குச் சென்று அங்கு உரையாட இருக்கிறார். மேலும், அவர் லேவில் கால்பந்து போட்டியையும் பார்ப்பார் என்று கூறப்படுகிறது. ராகுல் கல்லூரி நாட்களில் கால்பந்து வீரராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  ராகுல்காந்தி, பாங்காங் ஏரிக்கு, இருசக்கர வாகனம் மூலம் செல்கிறார். அவர் இரு சக்கர வாகனத்தில் (பைக்) இயற்கை அழகை ரசித்தப்படி செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல்,  என் தந்தை கூறியபடி, உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றான பாங்காங் ஏரிக்கு  நாங்கள் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெரிவித்துள்ளார்.