டில்லி

பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இமாசலப் பிரதேச வெள்ளம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்ன்றனர்.

இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளன. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளன.

இதில் இமாச்சலப்பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டி வருகிறது .இதுவரை மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளது., இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

மாநிலம் முழுவதும் வரலாறு காணாத மழை, வெள்ளம், மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றால் பேரழிவைச் சந்தித்து வரும் நிலையில், இமாசல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

இமாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக டில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.