சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  2வது கட்ட தேர்தலின் போது தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 97 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற  தொகுதிகள் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும்  மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.

மனுதாக்கல் செய்ய கடைசி நாள்  26-ந் தேதி. 27-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 29-ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அதன்படி,

வேட்புமனு தாக்கல்  அலுவலக வேலை நாட்களில் தினசரி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே.

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வேட்பு மனுக்கள் பெறப்படும்.

மனுத்தாக்கல் செய்பவருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனுக்கள் ஏற்கப்படாது என்றும் கூறினார். 

வேட்பு மனுவைத் தாக்கல் செய்பவர்கள் தங்கள் 5 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும்

வேட்பு மனுத்தாக்கல் செய்பவர் தனது மீது குற்றவழக்குகள் இருந்தாலோ அல்லது தண்டிக்கப்பட்டிருந்தாலோ அதனையும் வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ தெரிவித்துள்ளார்.