சென்னை: சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். “2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துளை இயக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு 90 நாட்கள் முன்னதாக நடைபெற்றுள்ளதால், பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க முடியும், அரசு அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும், தைப்பூசம் மற்றும் குடியரசு தின விடுமுறைக்காக சொந்த ஊர் செல்வதற்கு பதிவு செய்த பயணிகள் வசதிக்காக சென்னை நகரில் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டுமென ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்  சங்க தலைவர் அன்பழகன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள 60,000 பயணிகளின் பயணத்தை இடையூறு இல்லாமல் பயணிக்க ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்து இயக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு 30 முதல் 90 நாட்கள் வரை அட்வான்ஸ் புக்கிங் நடைபெறுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்தை தென் தமிழகம் செல்லும் அனைத்தும் ஆம்னி பேருந்துகள் பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 27 டிராவல்ஸ் அலுவலகங்களும், 77 பயணிகளை ஏற்றும் இடமும், 67 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கும் ஆக மொத்தம் 144 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடங்களே கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளன. ஆனால், தினசரி சாதாரண நாட்களில் 850 ஆம்னி பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1250 ஆம்னி பேருந்துகளும் மற்றும் விழா காலங்களில் பயணிகளின் தேவைக்கேற்றவாறு 1600 வரை ஆம்னி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். இந்நிலையில் ஒட்டுமொத்த ஆம்னி பேருந்துகளையும் (தினசரி சுமாராக ஆயிரம் பேருந்துகள்) கிளாம்பாக்கத்தில் நிறுத்தி இயக்க சாத்தியக்கூறுகள் இல்லை.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் அரசால் ஆம்னி பேருந்துகள் நிறுத்து வதற்காக பஸ் நிறுத்தும் இடம் வேலை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த இடம் வேலை முடிவதற்கும் சுமாராக ஆறு மாதம் காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இடம் தயாராகும் வரை பேருந்துகளை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வரவேண்டிய சூழ்நிலை இருப்பதால் பயணிகளுடன் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு இயக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல பலமுறை கோரிக்கை வைத்தும் CMDA நிர்வாகம் 1000 ஆம்னி பேருந்துகள் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் பகலில் நிறுத்தி வைத்து பராமரித்து இரவில் இயக்குவதற்கு சாத்தியக்கூறுகள் பற்றி நாங்கள் பலமுறை கேள்விகளை எழுப்பியும் பதில் ஏதும் அளிக்காமல் போக்குவரத்து துறை சார்பாக சாத்தியம் இல்லாமல் 2002-ல் உயர் நீதிமன்றம் விதித்த ஆணையை (WP.41607 of 2002 dated 30.12.2003) அவமதித்து 22.1.2024 அன்று ஆம்னி பேருந்துகள் 24.1.2024 முதல் சென்னை நகரத்திற்குள் வர அனுமதி இல்லை இரண்டு நாட்கள் மட்டும் கால வாசம் கொடுத்து சுற்றறிக்கை திடீரென அனுப்பப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு முன்னே முன்பதிவு செய்துள்ள ஆம்னி பேருந்து பயணிகளின் பயணங்கள் கேள்விக்குறியாகி பயணிகள் பல குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் உயர் நீதிமன்ற ஆணையை மீறி சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து துறைக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக அரசு சார்பாக எங்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 ட்ராவல்ஸ் அலுவலகங்களும், 80 பயணிகளை ஏற்றும் இடமும், 320 பஸ் நிறுத்தி வைக்கும் இடம் ஆக மொத்தம் 400 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலே உள்ளது.

ஆகையால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு முன்னே முன்பதிவு செய்துள்ள பயணிகளின் பயணங்கள் தடைப்படாமல் இருக்க போக்குவரத்து துறை மற்றும் CMDA உத்தரவு வழங்க வேண்டும். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு 90 நாட்கள் முன்னதாக நடைபெற்றுள்ளதால் பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க முடியும் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.