சென்னை: விநாயகர் சதுர்த்தி விடுமுறையை சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கொள்ளை வசூல் நடத்தி வருகிறது. ஏற்கனவே அமைச்சர் சிவசங்கர் பல முறை எச்சரித்தும், அதை அலட்சியப்படுத்திவிட்டு, வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது ஆம்னி பேருந்துகள்.

விநாயகர் சதுர்த்தி, நாகை மாதா திருவிழாவையொட்டி ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில், சாதாரண நாட்களை விட, விசேஷ நாட்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்று மாலை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளிடம் இருந்து அதிக அளவிலான கடட்டணங்களை ஆம்னி பேருந்துகள் வசூலித்து வருகின்றன.

குறிப்பாக சென்னையில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும், அரசு பேருந்துகளின் இடங்களும் நிரம்பி உள்ள நிலையில், பலர் ஆம்னி பேருந்துகளை நாடி வருகின்றனர். ஆனால், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் டபுளாக  உயர்த்தப்பட்டுள்ளதால்  பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.800 ஆக இருந்த பேருந்து கட்டணம் தற்போது ரூ.1,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவைக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.1,400 கட்டணமாக வசூலித்த நிலையில், தற்போது ரூ.2,500 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விடுமுறையை ஒட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விசேஷ நாட்களின்போது, ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக அரசிடம் புகார் அளித்தால், அமைச்சர் சிவசங்கர் எப்போதும் போல, அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒப்புக்கு சப்பானியாக கூறி வருகிறார். இதனால், ஆம்னி பேருந்து நிர்வாகத்தின் அமைச்சரின் எச்சரிக்கையை மீறி, பேருந்து கட்டணங்களை அதிக அளவில் வசூலித்து வருகின்றனர்.