சென்னை: பள்ளிகளில் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில்,  தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் 2 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் வந்த 2 பேருக்கு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் விமான நிலையங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளாகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

  • வேகமாகப் பரவும் ஒமிக்ரான் வைரஸ் விழிப்புணர்வு & நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளில் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.
  • அனைத்து வகைப் பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
  • பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது.
  • ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
  • *மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்
  • 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  • நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்.
  • பள்ளியில் நீச்சல் குளங்களை மூட வேண்டும்.
  • இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

++++