சென்னை: புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை 4 வாரத்துக்குள் அகற்ற அதிகாரிகளுக்கு  உத்தரவிட்ட  உயர்நீதி மன்றம் அரசு நிலங்களைப் பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பென்னலூர் கிராமத்தில்,   மயானத்துக்கு செல்லும் பாதையையும்,  புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என அக்கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், எந்த விவரங்களும் இல்லாமல், தேவாலயம் கட்டியவருக்கு ஆதரவாக பதில் மனு தாக்கல் செய்த தாசில்தாருக்கு கண்டனம் தெரிவித்ததுடன்,  புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க ஆட்சேபங்கள் இல்லை என்பதற்காக அரசு நிலங்களை ஆக்கிரமிக்க அனுமதிக்கலாமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆக்கிரமிப்புகள் எந்த இடத்தில் இருந்தாலும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்து, அரசு சொத்துக்களைப் பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறிய நீதிபதி,

தேவாலயம் கட்டுவதாக இருந்தால் உரிய கட்டிட அனுமதியும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியும் அவசியம் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தேவாலயம் எந்த அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளதால் அதை நான்கு வாரங்களில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நீதிமன்றத்திற்கு உண்மைத் தகவல்களை மறைக்கும் வகையில் எந்த விவரங்களும் இல்லாமல் பதில்மனு தாக்கல் செய்த தாசில்தாருக்கு எதிராக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி,

ஆக்கிரமிப்பு செய்து மத வழிபாட்டுத் தலங்கள் கட்டியிருந்தால் அவற்றுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.