சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை கேட்டு வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்படும் என்று பன்னீர்செல்வம் காபந்து முதல்வராக இருந்தபோது அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் இன்று குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியை டெல்லியில் சந்தித்து வலியுறுத்தினர்.

இந்நிலையில் வரும் 8ம் தேதி முதல் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கு அனுமதி கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மதுசூணன் இன்று மனு அளித்துள்ளார்.

பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு சசிகலா தரப்புக்கு கிலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.