சென்னை:

மிழகத்தில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடங்களுக்கு தேவையான முட்டை கொள்முதல் டெண்டர், பழைய முறைப்படியே  கோர அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத் தில்  தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு கொள்கை முடித்து எடுத்து உள்ளதாகவும்,  மூன்று மாதங்களில் புதிய டெண்டர் கோரப்படும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சத்துணவுக்கூடங்களுக்கான முட்டை கொள்முதலுக்கான டெண்டர் காலம் கடந்த 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, டெண்டர் கொள்முதல் தொடர்பான கொள்கையை மாநில அரசு மாற்றி, இனிமேல் மாநில அளவில் டெண்டர் கோரப்படாது என்றும்,  மண்டல அளவில் டெண்டர் கோருவது என முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. மேலும், இந்த டெண்டர்களில்  வெளிமாநில கோழி பண்ணைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதுடன், ஒரு லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யும் திறனும், டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள முட்டைகளில் 60 சதவீதம் சப்ளை செய்யும் தகுதியுடைய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என தமிழக அரசு  சில  நிபந்தனைகளையும் விதித்திருந்தது.

இதை எதிர்த்து, கோழிப்பன்னை அதிபர்கள் தரப்பபில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, தமிழக அரசின்  அரசாணையை ரத்து செய்து தனி நீதிபதி மகாதேவன், கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்குனர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மண்டல அளவில் முட்டை கொள்முதல் செய்யும் முயற்சி தோல்வியடைந்து விட்டதால், பழைய முறைப்படி, மாநில அளவில் டெண்டர் கோருவது என கொள்கை முடிவு  எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களில் புதிய டெண்டர் கோரப்படும் எனவும் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், புதிய டெண்டர் கோரும் வரை, தற்போது முட்டை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்கள், அதே விலைக்கு தொடர்ந்து சப்ளை செய்ய அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.