மதுரை: வாகனங்களில் விதி மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீக காலமாக வாகனங்களில்  உள்ளட நம்பர் பிளேட்களில், அரசியல் கட்சிகளின் சின்னம், படங்கள் மட்டும், விதிகளை மீறி அரசியல் கட்சி கலர்கள் போன்றவற்றுடன் நம்பர் பிளேட் காணப்படுகிறது. குறிப்பாக ஆளுங்கட்சி கலரில் நம்பர் பிளேட் அதிகமாக காணப்படுகிறது. இதுபோன்ற நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட வாகனத்தில் வருபவர்களை காவல் துறையினர் கண்டுகொள்வது இல்லை.

இது தொடர்பாக கரூர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘வாகனங்களில் எண் பலகை பாதுகாப்பு மற்றும் அடையாளத்திற்காக வைக்கப்படுகிறது. இந்த எண் பலகையின் அளவு, எண்களின் அளவு உட்பட இது தொடர்பாக இந்திய மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 50,51 பல்வேறு வரம்புகளை நிர்ணயம் செய்துள்ளது.  ஆனால், இவற்றை மீறும் விதமாக கரூர் மாவட்டத்தில், ஏராளமான வாகனங்களில் எண் பலகையில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் முறையாக சோதனை செய்யபடுவதில்லை. இவை பல நேரங்களில் சட்டவிரோத செயல்களுக்கும் வாய்ப்பளிக்கின்றன. இந்திய மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 50,51ஐ மீறும் வகையில், வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது,  ‘வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை போக்குவரத்து அலுவலர்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? அது விதிமீறல் இல்லையா? என கேள்வி எழுப்பினர். மேலும், வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தினமும் ஆய்வு செய்து, வாகன எண் பலகையில் அரசியல் கட்சித்தலைவர் படங்களை ஒட்டுவது உள்ளிட்ட மோட்டார் வாகன விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அதிகளவில் அபராதங்களை விதிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.