சென்னை சாலைகளில் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் சில இடங்களில் வெறி நாய்கடிக்கு மக்கள் ஆளாக நேர்கிறது.

கடந்த வாரம் ராயபுரம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 27 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த நாயை அப்பகுதி மக்கள் கல்லால் அடித்துக் கொன்றனர்.

இதனையடுத்து தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கவும் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஊசியும் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நாய்கள் கணக்கெடுப்பு நாளை துவங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பு கடைசியாக 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகவும் அப்போது சென்னையில் சுமார் 53,000 நாய்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சென்னையில் இதை விட மூன்று மடங்கு அதிகமான நாய்கள் இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் கணக்கெடுப்பு நடக்க உள்ளதை அடுத்து சென்னையில் உள்ள நாய்களின் எண்ணிக்கை விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.