டெல்லி: 2019 ஜெஇஇ தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,  2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஜெஇஇ தேர்வை  மீண்டும் எழுத அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமை ஜெஇஇ தேர்வுக்கான புதிய விதிமுறைகள் வெளியிட்டு உள்ளது.

ஜேஇஇ மெயின் 2021 தேர்வு தேதிகள் சமீபத்தில், தேசியத் தேர்வுகள் முகமையால் அறிவிக்கப்பட்டது.  இதன்படி ஒரு ஆண்டில் நான்கு முறை ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியும். முதல்கட்டமாக பிப்ரவரி மாதம் 22 முதல் 25 ஆம் தேதி வரை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 329 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

இதையடுத்து ஜெஇஇ  தேர்வுக்கான விதி முறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 2019-ம் ஆண்டு ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்களுக்கு 2021 ஜேஇஇ தேர்வெழுத அனுமதி கிடையாது.

தேர்வர்கள் ஒரு ஆண்டில் நான்கு முறை ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியும்.

நான்கு தேர்வுகளில் பங்குபெறும் தேர்வர்கள் தாங்கள் நான்கு தேர்வுகளில், அதிகம் பெற்ற தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஜேஇஇ மெயின் தேர்வில், பி.இ., பி.டெக். படித்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அதற்குப் பிறகு அவர்களின் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அட்வான்ஸ்டு தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

தேர்வை எழுதுபவர்கள், 12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2020 ஆம் ஆண்டு ஐஐடியில் சேர்ந்தவர்களுக்குத் தேர்வெழுத அனுமதி கிடையாது.

2020 ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற்று, கொரோனா காரணமாக அட்வான்ஸ்டு தேர்வை எழுத முடியாதவர்கள், நேரடியாக 2021 ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதலாம்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.