சென்னை:
நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு உடைத்து வைத்திருந்த கற்களை லாரிகள் மூலம் எம் சாண்ட் தயாரிக்கும் பகுதிக்கு எடுத்துச் செல்லும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இங்கு நேற்று நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக ராட்சச பாறை சரிந்த விழுந்ததில், தொழிலாளர்கள் 6 பேர் 300 அடி பள்ளத்தில் சிக்கி உள்ளனர். தகவலறிந்த முன்னீர் பள்ளம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தவிர 300 அடி பள்ளத்தில் 3 ஜேசிபி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகள் சிக்கியுள்ளது.

இந்த ராட்சச பாறை விழுந்த இடத்தில் ஆறு தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். இங்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது விபத்தில் காயமடைந்த தொழிலாளி கூறிய தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.

இங்குப் பெய்து வரும் மழையின் காரணமாகப் பள்ளத்தில் மண்சரிவு மற்றும் கற்கள் விழுவதனால், மீட்புப்பணியின் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து மிகப்பெரிய கிரேன் இயந்திரங்கள் வரவழைத்து அவற்றின் மூலம் மீட்புப்பணியை எளிதாக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகிறனர் மீட்புப்பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.