சென்னை: தமிழ்நாட்டில் இன்று வடகிழக்கு பருவம தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதலே, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும், இன்று  17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டு உள்ளது. நவம்பர் 1, 2 தேதிகளில் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க இருக்கிறது. இதனால் 17  மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்று தொடங்கும் மழையானது, 4-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

பருவமழை தொடக்கம் காரணமாக, நவம்பர் 1, 2 தேதிகளில் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் நெல்லூர் முதல் கடலூர் வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, கேரளா உள்பட தென் இந்திய பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தை பொறுத்தவரையில் இயல்பையொட்டியே பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.