சென்னை: ஸ்டெர்லைட் ஆலை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை – இதுவரை ஆலை ஊழியர்கள் யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்று வேதாந்தா குழு தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வந்த நிலையில், பொதுமக்கள் போராட்டம், துப்பாக்கி சூடு காரணமாக, ஸ்டெர்லை ஆலை மூடப்பட்டது. சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு 2018-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆலை நிர்வாகத்தின் தரப்பில் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்திருந்த உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி வழங்க மறுத்து விட்டது.  இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் கொரோனா காலக்கட்டத்தில் ஆக்சிஜன் தேவையை கருத்தில்கொண்டு 3 மாதம் ஆலையை இயக்கி ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் அழைப்பு விடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளவர், ஆனால், தூத்துக்குடியில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என கூறியதுடன்,  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், நேர்மையான தீர்ப்பு வரும் என நம்புவதாகவும் கூறினார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்தாலும், ஆயிரக்கணக்கானோருக்கு பணி வழங்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், யாரும் இதுவரை பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றும் அனில் அகவர்வால் கூறினார்.