சென்னை: குடியரசு தினவிழாவின்போது வழங்கப்படும் வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சத்து-க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

2021–ம் ஆண்டு வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு முதன்மைச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை- என்ற முகவரிக்கு 14.12.2020-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சரால் 26.1.2021 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவர்.

இத்தகவலை அரசு முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.