சென்னை

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்  நிறைவடைந்துள்ளது.

நாடெங்கும்  நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.  நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 7 நாட்களாக அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நேற்று முன்தினம் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 20ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இன்று வேட்புமனு தாக்கல் இறுதி நாளானதால் ஏராளமான வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.