சென்னை: திமுக ஆட்சியில் வன்முறைகள் சாதிச் சண்டைகள், மத மோதல்கள் இல்லை என்றும், அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்வ தாகவும், ‘யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக காவல்துறை இருக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில்   முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு  கடந்த ஏப்ரல் மாதம்  6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி  துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. இதையடுத்த கடைசிநாள் அமர்வான  இன்று  தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் – காவல்துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதங்கள் நடை பெற்றது. தொடர்ந்து, இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.

2022-23ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினை  உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., காவல்துறை உயர் அலுவலர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த ஆட்சியில் வன்முறைகள் இல்லை, சாதிச் சண்டை கள் இல்லை, மத மோதல்கள் இல்லை, துப்பாக்கிச் சூடுகள் இல்லை, அராஜகங்கள் இல்லை.  இதுதான் இந்த ஆட்சியின் மிகப்பெரும் சாதனை. இதுதான் இந்த ஆட்சியின் உள்துறையின் மிக முக்கியமான சாதனையாக அமைந்திருக்கிறது.

தமிழக மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான அடித்தளத்தை, அமைத்து தந்துள்ளோம். இந்த அமைதியை உருவாக்கித் தந்தது, தமிழக அரசின் காவல்துறை.

இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், வெளி மாநிலங்களுக்குச் சென்ற தொழிற்சாலைகள் இன்று தமிழகத்துக்கு மீண்டும் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. புதிய முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் தமிழகம், பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்ற நற்பெயர் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகஅரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னொரு கை காவல்துறை. இந்த இரண்டும் முறையாக, சரியாகச் செயல்பட்டால், அந்த அரசாங்கம் தலைச்சிறந்த அரசாங்கமாக இருக்கும். அந்த வகையில் காவல்துறைக்கு சில கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறேன்.

காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறையாக, தண்டனை வாங்கித் தரக்கூடிய துறையாக இறுக்கிறது என்று அனைவரும் நினைக்கிறார்கள். காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கித் தரக்கூடிய துறையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, இந்த அரசினுடைய கொள்கை.

குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிட குற்றங்களே நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக அது மாறவேண்டும்.

கொலை, திருட்டு, பாலியல் தொந்தரவு, போதை மருந்துகள், வன்முறைச் சம்பவங்கள் ஆகியவைதான் மிகப்பெரிய குற்றங்கள். இவை எந்தச் சூழலிலும் நடைபெறாத வகையில் காவல்துறை திட்டமிடுதல் வேண்டும். எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் மோதல்களை உருவாக்க நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதே நேரத்தில் காவல்துறையை யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாகவும் இருக்க வேண்டும்.

எங்கோ ஒருகாவலர் செய்யக்கூடிய தவறு, இந்த ஆட்சியின் தவறாக குற்றம்சாட்டப்படும். சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுத்திருந் தாலும், ஆட்சி மீதுதான கறையாக அந்தச் சம்பவம் பேசப்படும். எனவே காவல்துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும், விமர்சனத்துக்கு இடமில்லாமல் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். எந்த திசையிலிருந்து அழுத்தங்கள் வந்தாலும், சிபாரிசு வந்தாலும் நீங்கள் சட்டத்தின் பக்கமே நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.