கடலூர்:
சிதம்பரம் நடராஜர் கோயிலின், ‘தேர்’ மற்றும் ‘தரிசன’ விழாவில் கலந்துகொள்ள, இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும், பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதத் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கியத் திருவிழாக்களான, ‘தேர்’ மற்றும் ‘தரிசன’ விழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம், பல்வேறு கட்டுப்பாடுகளை வழிமுறைகளுடன் செயல்படுத்த உத்தரவிட்டது. இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், திருவிழாக்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளியூர் பக்தர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது.

கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி, சில வெளியூர் பக்தர்களும் கலந்துகொள்ளலாம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாளை தேரோட்டமும், நாளை மறுநாள் தரிசன விழாவும் நடக்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணையவழி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவித்தது. இந்நிலையில், நேற்று இரவு கீழவிதியில் எதிர்ப்புத் தெரிவித்தும் கோயில் தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும் தரையில் அமர்ந்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பக்தர்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது எனக் கோஷங்களை எழுப்பினர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் சமாதானத்தை ஏற்க மறுத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.