மதுரை :

து குடிப்பதால் மட்டும் கல்லீரல் பாதிக்கப்படுகிறது என்பது நிரூபிக்கப்படுவது  இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆனந்த் ராஜ் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஏழைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் நோய் பாதிப்பிற்கு 85,112 பேர் வெளி நோயாளிகளாகவும், 7,157 பேர் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், கடந்த 2014ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாவும் தெரிவித்திருந்தார்.  மேலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மதுகுடிப்பதே 80 சதவீதம் காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால்  மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அனைத்திலும் கல்லீரல் சிறப்பு சிகிச்சைப் பிரிவு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமது மனுவில் கோரி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சத்யா நாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சுகாதாரத்துறை செயலர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு 80% மது தான் காரணம் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. தவிர கல்லீரல் பாதிப்புக்கு அரசு மருத்துவமனையில் பொது மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.