லக்னோ: இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது, அரசு  நலத்திட்டங்களில் கட்டுப்பாடு என   உ.பி. மாநில பாஜக அரசு புதிய சட்ட வரைவு மசோதா கொண்டு வந்துள்ளது.

நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, உ.பி. மாநிலத்தில்,  இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை கட்டுப்படுத்துதல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்பட பல்வேறு அரசின் சலுகைகளை பெறுவதற்கு தடை விதிக்கும் வகையில்,  உத்தரபிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.

‘மேலும், நாம் இருவர் நமக்கு இருவர் திட்டத்தை ஏற்பவர்கள் அரசுப் பணியில் இருந்தால் கூடுதலாக இரண்டு இன்கிரிமென்டுகள் வழங்கப்படும், 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் 4 பேருக்கான ரேஷன் கார்டு மட்டுமே வழங்கப்படும், அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது, ஆனால், மானிய விலையில் வீடு, நிலம் வாங்க உதவி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கு மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் வரைவு  குறிப்பிடப்பட்டுள்ளது.