பெங்களுரூ:
முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், மஜத 19 இடங்களில் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் கர்நாடகாவின் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே கர்நாடக முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்தான் அடுத்த முதல்வர் என்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இது கர்நாடகாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைத்த தீர்மான அறிக்கையின் அடிப்படையில் யார் முதல்வர் என்று தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனையில் காங்கிரஸ் தலைமை உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகவுள்ளது. அங்கு சென்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று சித்தராமையா டெல்லி சென்றிருந்த நிலையில் இன்று டி.கே.சிவகுமாரும் டெல்லி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா, முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறியுள்ளார்.