சென்னை: பிரதமரின் பொதுக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ள நலையில், பிரதமர் மோடியின்  பிரசாரத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை  திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக  சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையம்  சென்றடைந்தார். அவருக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது,  தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். வடமாநில மக்களைப் போன்று தமிழர்களை ஏமாற்ற முடியாது. வரும் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு நல்ல தீர்ப்பை வழங்குவர்.

பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்ததில் இருந்து, அவர்களின் தோல்வி பயம் தெரிகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. ரா பிரிவு, உளவுத்துறை, அனைத்து போக்குவரத்துகள், துறைமுகங்கள் உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

இவ்வாறு இருக்கும்போது, தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இதன் வழியாகத்தான் செல்கிறது. இதை பாஜக கட்டுப்படுத்த தவறிவிட்டது. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, பெட்ரோல் விலையை பாதியாக குறைப்பேன், இந்தியாவின் பண மதிப்பை அமெரிக்காவின் பணமதிப்பிற்கு நிகராக்குவேன் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. மேலும், ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்றார்.