சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம்  தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஏப்ரல் 4ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காத நிலையில்,  வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சூழலில்  செந்தில் பாலாஜி  கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இலாகா இல்லாத அமைச்சராக திமுக அரசால் அறிவிக்கப்பட்டு, பல மாதங்களாக சிறையில் வசதி வாய்ப்புகள் இருந்து வருகிறார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியதுடன், நீதிமன்றமும் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு பல முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.  செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை விரைந்த முடிக்க அமர்வு நீதிமன்றத்திக்கு அறிவுறுத்தியது.

இந்த நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. கூடுதல் குற்றப்பத்திரிகையில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் சேர்த்துள்ளதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் எனவும் வழக்கு நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.