டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள்? சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாய்ப்பு இல்லை என்று கூறியதால், பொதுக்குழ தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு, சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெற்றது. இந்த  முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த  வழக்கு இன்று  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,  ஓ. பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக மொத்தம் எத்தனை வழக்குகள் பதிவு செய்துள்ளீர்கள்,  கடந்த 11அஆம்தேதி பொதுக்குழுவில் என்ன நடந்தது? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல தீவிரமாக முடிவுகள் பொதுக் குழுவில் எடுக்கப்பட்டன என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரு தரப்பினரும் சமரசமாக செல்ல வாய்ப்பு உள்ளதாக என கேள்வி எழுப்பியது. அதற்கு ஒபிஎஸ், இபிஎஸ் தரப்பில் வாய்ப்பில்லை என்ற பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை  உயர்நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ்-க்கு அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்குள் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை குறித்து விசாரணை நடத்தி  தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், அதுவரை தற்போதைய நிலை தொடரும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.