டில்லி

த்திய அரசின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் 4ஆம் அலை கொரோனா ஏற்பட வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சீனா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  அமைச்சர் இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல், தடுப்பூசி திட்டம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச விமானங்கள் சேவை தொடங்க உள்ளதால், இத்திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சர் மன்சுக் மாண்டவியா  தொற்றுநோய் மேலாண்மை குறித்து மூன்று முக்கிய அறிவுரைகளை வழங்கியதாக உயர்மட்ட அதிகாரிகள் கூறினர். கொரோனா பணிக்குழுவின் தலைவரான டாக்டர் நரேந்திர குமார்,

“இனி இந்தியாவில்  கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு.  மற்ற நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.  இந்த சமத்துவமின்மையின் பங்கு கொரோனா தொற்றுநோயில் மிகவும் முக்கியமானது ஆகும். ஏனெனில் ஆரம்பத்தில்  இருந்து தற்போது வரை, கொரோனா வைரஸ் பரவல் நோய் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விளைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் வைரஸின் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப உள்ளூர் மற்றும் சர்வதேச  கண்காணிப்பு முறையைப் பின்பற்றி வருகிறோம்.  இந்த ஆய்வுகளில், உருமாற்றம் அடைந்த வைரஸ் இன்னும் கண்டறியவில்லை.  ஆய்வுகள் மரபணு வரிசை முறையின் போது வைரஸில் எந்த  மாற்றமும் இல்லை என கூறுகின்றன.  

ஆகவே இந்தியாவில் நான்காவது அலைக்கான அறிகுறிகள் இல்லை.  ஆயினும் மூன்று வகையான நடைமுறைகளைப் பின்பற்ற மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது கண்காணிப்பை அதிகரிப்பது, மரபணு வரிசைமுறை அதிகரித்தல், அதிக அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”

எனத் தெரிவித்துள்ளார்.