பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, பாடகி சின்னப்பொண்ணு கடந்த ஞாயிற்றுக் கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் நிலத்தின் ஆற்றலை சொந்தமாக்கிய நிரூப், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ‘பெட்ரூமை பயன்படுத்த இன்னும் 7 நிமிடங்கள் தான் உள்ளது’ என எச்சரிக்கிறார். பெண்கள் அனைவரும் அவசர அவசரமாக கிளம்புகிறார்கள். பின்னர் டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்திருக்க, பாகற்காய், பச்சை மிளகாயை சாப்பிட சொல்கிறார்.

இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பூட்டும் வகையில் டான்ஸ் டாஸ்க் வழங்கப்படுகிறது. “சினிமா சினிமா” என்ற பெயரில் தொடங்கும் இந்த டாஸ்கில், ஹவுஸ் மேட்ஸ்களுக்கு தனித்தனி கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் கதாபாத்திரத்திற்கான பாடல் ப்ளே செய்யப்படும் போதெல்லாம் நீங்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வந்து நடனம் ஆட வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார். சிபிக்கு – ரஜினிகாந்த், வருண் – ரோபோ, இசைவாணி – சந்திரமுகி, மது – புலிகேசி கதாபாத்திரலும் இருப்பது ப்ரோமோவில் தெரிகிறது.

மூன்றாவது ப்ரோமோவில் மதுமிதா மற்றும் தாமரை சண்டை போடுகின்றனர். அதில் எதற்கு அவ, இவ என பேசுகிறாய் என தாமரை, மதுமிதாவுடன் கேட்கிறார். அதற்கு மது, இது கெட்ட வார்த்தை இல்லை என விளக்கம் கூற முயற்சிக்கும் போது தாமரை கத்தி பேசுகிறார். அதற்கு மது, என்னிடம் இப்படி கத்தாதீர்கள் என கேட்க, தாமரையோ அப்படி தான் பேசுவேன் என்கிறார். நீங்கள் யார் இப்படி என்னிடம் கத்தி பேச, எனக்கும் கத்தி பேச தெரியும் என மது கூறுகிறார்.