முருகன் – கருப்பசாமி

விருதுநகர்:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், பேராசிரியர் முருகனைத் தொடர்ந்து பேராசிரியர் கருப்பனும் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. காவலர்கள் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, நிர்மலாதேவியிடம் தொடர் விசாரணை நடத்தியதில் அவர் தன்னை செல்போனில் பேச தூண்டியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரை மட்டும் கூறினார்.

இந்தநிலையில் காவல்துறையினர் தேடி வந்த பேராசிரியர் முருகன் நேற்று முன்தினம் காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் சிக்கினார். அவரை விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்திற்கு கொண்டு காவலர்கள் சென்று விசாரித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்த  இந்த  விசாரணை நேற்றும் தொடர்ந்தது.

விசாரணையில் முருகன் மீது நிர்மலாதேவி கூறியிருந்த தகவலுக்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பாலியல் குற்றத்துக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

மேலும் மற்றொரு பேராசிரியர் கருப்பசாமியை தேடும் பணியில் காவல்துறையினர்  தீவிரம் காட்டினர். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை தேடுதல் பணியில் ஈடுபட்ட காவலர்களிடம்  நள்ளிரவில் கருப்பசாமி சிக்கினார். ஆனாலும்  அவரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வராத நிலையில் அந்த தகவலை உறுதிசெய்ய முடியாத நிலை தொடர்கிறது.

இந்தநிலையில் தேவாங்கர் கல்லூரி செயலாளர் ராமசாமி, பேராசிரியர் கந்தசாமி மற்றும் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த தங்கப்பாண்டியன் ஆகியோரிடம் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். நிர்மலா தேவியின் 5 நாள் போலீஸ் காவல் முடியும் நிலையில் இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்குள் அவர் சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

இதற்கிடையே நிர்மலாதேவி மதுரை பல்கலைக்கழகத்தில் தங்கி புத்தாக்கப்பயிற்சி பெற்றபோது அவர் தங்கியிருந்த அறையில் தூத்துக்குடியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவரும் தங்கி இருக்கிறார்.  நிர்மலாதேவிக்கு அறை கிடைக்காததால் அவர் தூத்துக்குடி பேராசிரியை அறையில் மார்ச் மாதம் 13-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தங்கி இருந்திருக்கிறார்.  இந்த நிலையில் நிர்மலாதேவியை தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததால் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இதனால் அந்த பேராசிரியையிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தார்கள். அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.