சென்னை: சென்னையில் 9இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோப்புப் படம்

போதைபொருள் கடத்தல் தொடர்பாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் இன்று காலை வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் சந்தேகத்திற்கிடமான சிலரிடம் தனி விசாரணை நடத்தினர். இந்த நிலையில், மேலும்  சென்னை உள்பட மாநிலம் முழுவதும்  25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை செய்து வருகிறது.

சமீபத்தில், கேரள மாநிலம் விழிஞம் துறைமுகம் அருகே 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதை பொருட்கள் கடத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைக்காக தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், கேம்ப் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை என மொத்தம் 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் 11 இடங்களிலும், திருப்பத்தூரில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.