டெல்லி:  நாடு முழுவதும்  காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் இன்று  ( 9ந்தேதி) நள்ளிரவுமுதல்  நவம்பர் 30ந்தேதி நள்ளிரவு வரை பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுவதாகவும், இதை மாநில அரசு கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது.

காற்று மாசு  உயர்வால்  கொரோனா பாதிப்பு அதிகமாகும் எனவும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.  இந்த நிலையில், “நாடு முழுவதும் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம்  தெரிவித்துள்ளது.  காற்று மாசு, மிக மிக மோசமான பிரிவு மற்றும் மோசமான பிரிவு பதிவாகும் நகரங்கள், மாநகரங்களில் பட்டாசுகள் விற்பனை செய்யுவம்,  வெடிக்கவும்   முழுமையாக தடை விதிக்க  வேண்டும். நவம்பர் 9ம்தேதி முதல் 30ம்தேதி நள்ளிரவு வரை  வரை தடையை அமல்படுத்த வேண்டும் என்று  தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதன் காரணமாகவும், கொரோனாவைக் கருத்தில் கொண்டும் டெல்லி பெருநகரம் முழுவதுமாக பட்டாசு விற்க வெடிக்க முழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பசுமை பட்டாசுகள் உள்பட எந்த வகை பட்டாசுகளும் வெடிக்க கூடாது என்று இன்றைய புதிய உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எந்தெந்த நகரங்களில் காற்று மாசு மோசமாக இருந்ததோ அந்த நகரங்களிலும் பட்டாசுக்கு தடை விதிக்கப்படுள்ளது. அதே நேரத்தில் காற்று மாசு மிதமாக உள்ள நகரங்களில் ஏற்கனவே அந்த மாநிலங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தொடரலாம் என்று கூறப்படுள்ளது.

இதுவரை கட்டுப்பாடுகள் விதிக்காத மாநிலங்களில் தீபாவளி பண்டிகையன்று மட்டும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம். அதேபோன்று கிறிஸ்துமஸ் தினத்தன்றும், புத்தாண்டு அன்றும் நள்ளிரவு 11:55 முதல் 12:30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம் என்று இன்றைய இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு மீண்டும் டிசம்பர் ஒன்றாம் தேதி விசாரணைக்கு ப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கும் அனுப்பி தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.