சென்னை

சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.   புதிய அரசு பதவி ஏற்கும் வரை காத்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்த போதிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதைக் கருத்தில் கொள்ளாமல் துணை வேந்தர்களை நியமித்து வருகிறார்.

அவ்வகையில் நேற்று தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரைத் தமிழக ஆளுநர் நியமனம் செய்தார்.   மூத்த பேராசிரியர் என் கே செல்வகுமார் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்.

இன்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   இன்று என் எஸ் சந்தோஷ்குமாரை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.