மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக இருப்பவர், தனஞ்ஜெய முண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

முண்டே மீது, பாடகி ஒருவர் மும்பை காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள முண்டே, “ஆனால் அந்த பெண்ணின் சகோதரியுடன் எனக்கு தொடர்பு உண்டு” என ஒப்புக்கொண்டுள்ளார்.

பாலியல் புகாரில் சிக்கிய தனஞ்ஜெய முண்டே, பதவி விலக வேண்டும் என பா.ஜ.க போர்க்கொடி உயர்த்திய நிலையில் நேற்று இந்த விவகாரத்தில் இரண்டு திருப்பங்கள் நிகழ்ந்தன.

இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் கேட்டபோது “அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டு கடுமையானது என்பதால் கட்சிக்காரர்களுடன் ஆலோசித்து இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இரண்டாவது திருப்பம், எதிர்பாராத ரகம்.

மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணா ஹெக்டே என்பவர் “முண்டே மீது புகார் தெரிவித்துள்ள பெண் என்னையும் ஐந்து ஆண்டுகள் துன்புறுத்தினார்” என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

“போனில் குறுஞ்செய்திகள் அனுப்பி என்னை தனது வலையில் சிக்க வைக்க அந்த பெண் முயற்சித்தார்” என குறிப்பிட்ட ஹெக்டே, இந்த விவகாரம் குறித்து அம்போலி போலீசில் புகாரும் செய்துள்ளார்.

“இதே பெண் வெறொரு அரசியல் தலைவருக்கும் வலை வீசினார், ஆனால் அவர் சிக்கவில்லை” என செய்தியாளர்களிடம் தெரிவித்த ஹெக்டே “நேற்று – நான்… இன்று – முண்டே… நாளை யாரோ?” என கூறினார்.

– பா. பாரதி