சென்னை: டாஸ்மாக் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக ஜூன் மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலி மதுபான பாட்டில்கள் பெறுவது உள்பட டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வருகிற ஜூன் மாதம் முதல் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களாக் சுற்று சூழல் பாதிக்கப்படவதாக வரும் புகாரையடுத்து காலி பாட்டிலை திரும்ப கொடுப்பவர்களுக்கு 10 ரூபாய் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காலி பாட்டில்களை சேமித்து வைக்க இடம் இல்லாத காரணத்தால் டாஸ்மாக் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுபான பிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே மாதம் 2022 ஆம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டு படிப்படியாகத் தற்பொழுது சென்னை, திருநெல்வேலி, விருதுநகர் நீங்கலாக தமிழ்நாட்டின் பிற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகப் பணியாளர்களிடமிருந்துப் புகார்கள் கடந்த காலங்களில் வந்த வண்ணம் இருந்தன. பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை வெளி முகமை வழியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்னிறுத்தி ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.
காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம்
மேலாண் இயக்குநர், அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் நேரில் அழைத்துப் பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் இயன்றவரை சரி செய்யப்படும் என்ற வாக்குறுதியை அளித்தும் கடைகள் திறக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த அறிவுறுத்தலில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எவ்வளவு பொறுப்புள்ளதோ அதே அளவு பணியாளர்களுக்கும் பொறுப்பு உண்டு என்றும், இதனை செயல்படுத்த பணியாளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பணியாளர்களின் கோரிக்கைக்கு இணங்க வெளி முகமையின் வழியாக காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை உடனடியாக உருவாக்கி உயர் நீதிமன்றத்தில் உறுதிப் பத்திரம் (affidavit) அளித்து, வரும் ஜூன் மாத இறுதிக்குள் பணியாளர்களின் கோரிக்கையை முழுவதும் நிறைவேற்றும் வண்ணம், அவர்கள் பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை கையாளும் தற்போதைய நடைமுறையை முழுமையாக தவிர்க்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
எனவே, பணியாளர்கள் அனைவரும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து, பணியாளர் நலன் காக்க நிர்வாகம் முன்மொழியும் இத்திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு இன்று வழக்கம் போல பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]