டில்லி

வாகனங்களை ஓட்டும் தினங்களுக்கு மட்டும் வாகன காப்பீட்டு பிரிமியம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எனவே சாலையில் வாகன எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.   மேலும் தற்போதைய ஊரடங்கால் மக்களின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி எடில்வீஸ் பொது காப்பீடு ஒரு மொபைல் செயலி மூலம் இயங்கும் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வாகன ஓட்டிகள் தாங்கள் வாகனம் செலுத்தும் தினத்தன்று மட்டும் செயலி வழியாகக் காப்பீட்டை ஆன் செய்துக் கொள்ளலாம்,   வாகனம் செலுத்தாத நாட்களில் ஆஃப் செய்துக் கொள்ளலாம்.  இந்த காப்பீட்டில் வாகனம் செலுத்தும் நாட்களின் அடிப்படையில் மட்டும் பிரிமியம் தொகை கணக்கிடப்படும்.

அதே வேளையில் இந்த காப்பீட்டு வாகனங்கள் திருட்டுப் போவது மற்றும் தீ விபத்து பாதுகாப்பை வருடம் முழுவதும் அளிக்க உள்ளது.   இந்த நிகழ்வுகள் வண்டிகள் ஓடினாலும் நின்றுக் கொண்டிருந்தாலும் நிகழ வாய்ப்புள்ளதால் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது.   அதே வேளையில் காப்பீடு ஆன் செய்த நாட்களுக்கு மட்டும் விபத்துக் காப்பீடு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காப்பிட்டு திட்டத்தின் கீழ் ஒரே பாலிசியில் பல வாகனங்களை  இணைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   வாடிக்கையாளர்கள் இதனால் தாங்கள் எந்த வாகனத்தில் செல்கின்றனரோ அந்த வாகனத்துக்கான காப்பீட்டை  மட்டும் ஆன் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  காப்பீட்டு தொகை ஓட்டுநரின் வயது மற்றும் அனுபவத்தைப் பொறுத்துக் கணக்கிடப்பட உள்ளது.