சென்னை: 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான தேர்வுகளை மொத்தமாக 34000 மாணாக்கர்கள் எழுதாத காரணத்தால், அவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணாக்கர்களுக்கு, மார்ச் 2 முதல் 24 வரை பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 8.5 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமோ என்ற குழப்பத்தில் தேர்வர்கள் இருந்தனர்.

ஆனால் திட்டமிடப்பட்ட தேதிகளில் தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு மார்ச் 24ம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தன.

இந்நிலையில், தேர்வின் கடைசி நாளில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனால், பலர் தாங்கள் படித்துக் கொண்டிருந்த பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

எனவே, தேர்வை எழுத முடியாத சூழலில் சிக்குண்டவர்களுக்கு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுகள் வேறு தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.