சென்னை: மாணவர் நலனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செயலியான  “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், பொதுத்தேர்வு தேதிகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அப்போது, தமிழ்நாட்டில், 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை என்றார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  பள்ளி கல்வித்துறைஅமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் அ.எ மாணவர் நலனுக்கான “நலம் நாடி” செயலியை  அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து,  அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை நேரடி பயனாளர் பணப் பரிவர்த்தனை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையவழி குறைதீர் புலம் தொடங்கி வைக்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

இவற்றை தொடங்கி வைத்த பின் பேசிய அவர், நலம் நாடி செயலி, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார். இந்த ஊக்கத்தொகை உரிய நேரத்தில் கிடைக்காததால் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை, தேர்வுகான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கபப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.